×

மாமல்லபுரத்தில் பஞ்ச பாண்டவர் மண்டபத்தில் விரிசல் ஏற்பட்டு கசியும் மழைநீர்: சீரமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பஞ்ச பாண்டவர் மண்டபத்தில் விரிசல் ஏற்பட்டு மழைநீர் கசியும் நிலை உள்ளது. இவற்றை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாமல்லபுரம் உலக புகழ் வாய்ந்த சுற்றுலா தலமாகவும், சிற்பங்களுக்கு பெயர்போன நகரமாகவும் திகழ்ந்து வருகிறது.

இங்கு, கடந்த 7ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் இங்குள்ள பாறைகளில் வெண்ணெய் உருண்டை கல், அர்ஜூணன் தபசு, பஞ்ச பாண்டவர்கள் மண்டபம், கிருஷ்ண மண்டபம், ஐந்து ரதம், கடற்கரை கோயில், புலிக்குகை, வராக மண்டபம், மகிஷாசூரமர்த்தினி மண்டபம், ராமானுஜர் மண்டபம், திருமூர்த்தி மண்டபம், கோனேரி மண்டபம், கோடிகால் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் மற்றும் குகைக் கோயில்களை செதுக்கினர். இதில், குறிப்பாக வெண்ணெய் உருண்டை கல், அர்ஜூணன் தபசு, பஞ்ச பாண்டவர்கள் மண்டபம், கிருஷ்ண மண்டபம் ஆகியவை மேற்கு ராஜவீதியில் அமைந்துள்ளது. இந்த சிற்பங்களை சுற்றிப் பார்க்க உள்நாடு மற்றும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வருகின்றனர். அப்படி வருபவர்கள் பஞ்ச பாண்டவர் மண்டபத்தை சுற்றிப் பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.

இங்குள்ள, குகை கோயில்களில் பெரிய குகை கோயிலாக பார்க்கப்படுகிறது. இந்த, மண்டபத்தில் உள்ள இடுக்குகளில் சில்லறை காசுகளை வைத்து விட்டு சென்றால், செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் என நினைத்து வட மாநில சுற்றுலா பயணிகள் சில்லறை காசுகளை வைத்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது, பஞ்ச பாண்டவர் மண்டபத்தின் மேல் பகுதியில் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் மண்டபத்தின் மேற்பகுதியில் இருந்து மழைநீர் கசிந்து வருகிறது. மேலும், நேற்று பஞ்ச பாண்டவர் மண்டபத்தை சுற்றிப் பார்க்க வந்த பயணிகள் மண்டபத்தின் மேல் பகுதியில் இருந்து கசியும் மழைநீரை பார்த்து முகம் சுழித்து செல்கின்றனர். எனவே, தொல்லியல் துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு போர்க்கால அடிப்படையில் பஞ்ச பாண்டவர் மண்டபத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாமல்லபுரத்தில் பஞ்ச பாண்டவர் மண்டபத்தில் விரிசல் ஏற்பட்டு கசியும் மழைநீர்: சீரமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Pancha Pandwar Hall ,Mamallapuram ,MAMALAPURAM ,MANALAPURAM ,PANCHA PANDAVAR HALL ,Mamallapur ,Dinakaraan ,
× RELATED மாமல்லபுரம் இசிஆரில் விபத்தை குறைக்க...